திருமலை: ஆந்திராவில் காஜுவாக்கா, பீமவரம் ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளில் நடிகர் பவன் கல்யாண் போட்டியிட உள்ளார் என்று அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார். ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் வருகிற 11ம் தேதி நடக்கிறது. நடிகரும் ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் எந்த தொகுதியில் இருந்து போட்டியிடுவது என்று ஜன சேனா கட்சி மாநிலம் முழுவதும் சர்வே மேற்கொண்டது. இதில் அனந்தப்பூர், திருப்பதி, ராஜா நகரம், பிட்டாபுரம், பீமவரம், காஜுவாக்கா, பெந்துர்த்தி, இச்சாபுரம் ஆகிய 8 சட்டப்பேரவை தொகுதிகள் பவன் கல்யான் போட்டியிடுவதற்கு உகந்த தொகுதிகளாக சர்வே முடிவுகளில் தெரிய வந்தது.
இதையடுத்து கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் இந்த 8 தொகுதிகளில் எந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்று மேலும் ஒரு சர்வே நடத்தியபோது பீமவரம், காஜுவாக்கா ஆகிய இரண்டு தொகுதியிலிருந்தும் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மேற்கு கோதாவரி மாவட்டம், பிமவரம் தொகுதியில் இருந்தும், விசாகப்பட்டினம் மாவட்டம், காஜுவாக்கா ஆகிய இரண்டு சட்டப்பேரவை தொகுதியில் இருந்தும் பவன் கல்யாண் போட்டியிட உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. விரைவில் எந்த தேதியில் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று ஜன சேனா கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் கங்காதரம் தெரிவித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி