திருமலை: ஆந்திராவில் நின்றிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் 4 விவசாயிகள் பரிதாபமாக பலியாகினர். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்தனர். ஆந்திராவின், நரசராவ்பேட்டையைச் சேர்ந்த 6 விவசாயிகள் நேற்று அதிகாலை குண்டூரில் இருந்து ரயிலில் டோன் ரயில் நிலையம் வந்தனர். பின்னர் அவ்வழியாக நோயாளியை இறக்கிவிட்டு வந்த ஒரு தனியார் ஆம்புலன்சில் ஏறி அனந்தப்பூருக்கு புறப்பட்டனர். வழியில் குட்டி அனந்தப்பூர் கிராமம் அருகே, திடீரென நிலை தடுமாறிய ஆம்புலன்ஸ் அங்கு சாலையோரம் நிறுத்தியிருந்த லாரி மீது பயங்கர வேகத்தில் மோதியது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் அப்பளம் போல் நொறுங்கியது.
இதில் 4 விவசாயிகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். டிரைவர் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். அரவ்கள் சிகிச்சைக்காக அனந்தப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்சில் நோயாளிகளை மட்டுமே ஏற்றிச்செல்ல வேண்டிய நிலையில் டிரைவர் பயணிகளை ஏற்றிச்சென்று அது விபத்துக்குள்ளாகி 4 பேர் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.