'நானும் காவலன்'பிரசாரத்தை தீவிரப்படுத்தும் பிரதமர் மோடி: மார்ச் 31ல் மக்களுடன் கலந்துரையாடல்

புதுடெல்லி: நானும் காவலன் பிரசாரத்தை தீவிரப்படுத்தும் நோக்கில் வரும் 31ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மக்களுடன் கலந்துரையாட இருப்பதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். டிவிட்டரில் வெளியான நானும் காவலன்’ வீடியோ பிரசாரத்தில், சமூக கொடுமை, ஊழலை எதிர்த்து போராடுவதில் நான் தனியொருவன் அல்ல என்று கூறும் பிரதமர் மோடி, இந்திய குடிமகன்கள் அனைவரும் நானும் காவலன்’ என உறுதிமொழி எடுக்கும்படி அறிவுறுத்தினார். இதற்கு பாஜ தலைவர்கள், அமைச்சர்கள், மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து மோடி தனது டிவிட்டர் பெயரை காவலன் நரேந்திர மோடி’ என மாற்றி கொண்டார். அவரை பின்பற்றி பாஜ தலைவர் அமித்ஷா, அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் என அனைவரும் தங்களது டிவிட்டர் பெயருக்கு முன் காவலன்’ என்ற அடைமொழியை சேர்த்துக் கொண்டனர்.

இந்நிலையில், `நானும் காவலன்’ தற்போது டிரெண்டிங் ஆக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மக்கள் இயக்கமாக மாறியுள்ள நானும் காவலன்’ பிரசாரத்தை மேலும் தீவிரப்படுத்தும் முயற்சியாக, பிரதமர் மோடி மக்களுடன் கலந்துரையாட இருப்பதாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர், நானும் காவலன் உறுதிமொழி மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட முறை டிவீட் செய்யப்பட்டுள்ளது. 1,680 கோடி லைக்குகளை அள்ளியுள்ளது. இதனால் அதனை தீவிரப்படுத்த பிரதமர் மோடி மார்ச் 31ம் தேதி, நாடு முழுவதும் 500க்கு மேற்பட்ட இடங்களில் மக்களுடன் கலந்துரையாட உள்ளார்’’ என்று கூறினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் காவலாளி ஒரு திருடன்’ பிரசாரத்துக்கு எதிராக பாஜ இந்த பிரசாரத்தை கையில் எடுத்துள்ளதா என்ற கேள்விக்கு, கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது பிரதமர் மோடி தன்னை முதல் சேவகன்’, தேசத்தின் காவலன்’ என்று முன்னிலைப் படுத்திக் கொண்டார்’’ என்று ரவிசங்கர் பிரசாத் பதிலளித்தார்.

மோடி’ திரைப்படம் முன்கூட்டியே வெளியீடு

பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிப்பில் உருவாகிய மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த பி.எம். நரேந்திர மோடி’ திரைப்படம் ஏப்ரல் 12ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒருவாரம் முன்கூட்டி ஏப்ரல் 5ம் தேதி வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் சந்தீப் சிங் கூறுகையில், மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி ஒருவாரம் முன்னதாக படத்தை திரையிட தீர்மானித்தோம். இந்த படத்துக்கு மக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. அவர்களை நீண்ட நாள் காத்திருக்க வைப்பதில் எங்களுக்கும் விருப்பமில்லை. இது 130 கோடி மக்களுக்கான கதை’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: