டெல்லி: நாடு முழுவதும் 500 இடங்களில் உள்ள மக்களுடன் ஒரே நேரத்தில் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடத்தப்பட உள்ளது. முதல்கட்ட தேர்தல் அடுத்த மாதம் 11-ம் தேதி நடக்க உள்ள நிலையில், ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன், சட்டப்பேரவை தேர்தலும் சேர்த்து நடத்தப்பட உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 40 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.
இந்நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறனர். இதற்கிடையே, தனது டுவிட்டர் பக்கத்தின் பெயரையும் சவுகிதார் காவலன் நரேந்திர மோடி என்று மாற்றம் செய்துள்ளார். இதேபோல் பா.ஜனதா தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள், பாஜகவை சேர்ந்த முதல் அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பாஜக பிரமுகர்களும் தங்களது டுவிட்டர் கணக்குகளில் தங்களது பெயர்களுக்கு முன்னால் ‘காவலாளி’ (சவுகிதார்) என்ற அடைமொழியை இணைத்துள்ளனர். இதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, ‘காவலாளி ஒரு திருடன்’என விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நானும் காவலன்தான்’ என்கிற புதிய பிரசார வீடியோவை வெளியிட்டார்.
இந்நிலையில், நானும் ஒரு காவலாளி என்ற அடைமொழியை வீடியோ பிரசாரமாக முன்னெடுத்துச் செல்ல பிரதம்ர் மோடி திட்டமிட்டுள்ளார். அவ்வகையில், முதல்கட்டமாக வரும் 31-ம் தேதி நாடு முழுவதும் உள்ள 500 பகுதிகளில் பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் பொது மக்களிடையே காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார் என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி