×

பேராசிரியை நிர்மலா தேவி மதுரை சிறையில் இருந்து நாளை ஜாமீனில் வெளியே வர வாய்ப்பு

மதுரை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவிக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ஏற்கப்பட்டது. பேராசிரியர் நிர்மலா தேவி ஜாமீனில் செல்ல விருதுநகர் மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. உயர்நீதிமன்றம் ஜாமீன் அளிக்க உத்தரவிட்டிருந்த நிலையில், அதை ஏற்று கீழமை நீதிமன்றம் விடுவித்துள்ளது.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கு

விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கில் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஏப்ரல் 16ம் தேதி கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கில் முக்கிய பிரமுகர்கள் தொடர்பு உள்ளதாக கூறப்பட்டதால் நிர்மலா தேவி வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதனையடுத்து நிர்மலா தேவி அளித்த வாக்குமூலத்தில் மதுரை காமராஜர் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி என்பவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறியுள்ளதாக ஏப்ரல் 23ம் தேதி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கானது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் மிரட்டி தன்னிடம் வாக்குமூலம் பெற்றதாக நிர்மலா தேவி தெரிவித்திருந்தார்.

நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு

இதேபோல் முருகன் மற்றும் கருப்பசாமியும் தங்கள் மீதான குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து வந்தனர். இந்த வழக்கில் பல்வேறு முக்கிய நபர்கள் தொடர்பு உள்ளதாகவும் அவர்கள் கூறி வந்தனர். இதனிடையே தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி நிர்மலா தேவி, கருப்பசாமி மற்றும் முருகன் ஆகியோர் பலமுறை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தும் ஜாமீன் வழங்கப்படவில்லை.

 இதையடுத்து கருப்பசாமி மற்றும் முருகன் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கக்கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். தங்கள் மீதான குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இல்லை என்றும் அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இதனை தொடர்ந்து கடந்த ஏப்., 14ம் தேதி இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

சுமார் 11 மாதங்களுக்கு பிறகு நிர்மலா தேவிக்கு ஜாமீன்

இதையடுத்து சுமார் 11 மாதங்களுக்கு பிறகு கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மேலும் வழக்கின் விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும். விசாரணைக்க இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களுக்கு பேட்டி தர கூடாது என நிர்மலாதேவிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை விதித்தது.

நிர்மலா தேவி ஜாமீனில் நாளை வெளியே வர வாய்ப்பு

இந்நிலையில் விருதுநகர் நீதிமன்றத்தில் மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவியின் மூத்த சகோதரர் ரவி மற்றும் குடும்ப உறுப்பினர் மாயாண்டி ஆகியோர் ரூ.10,000 பிணை தொகையுடன் ஜாமீன் தருவதாக தெரிவித்தனர். இதையடுத்து நிர்மலா தேவி தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட 2 நபர் ஜாமீனை நீதிபதி மும்தாஜ் ஏற்றுக் கொண்டார். இவ்வாறு பேராசிரியர் நிர்மலா தேவி ஜாமீனில் செல்ல விருதுநகர் மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. உயர்நீதிமன்றம் ஜாமீன் அளிக்க உத்தரவிட்டிருந்த நிலையில், அதை ஏற்று கீழமை நீதிமன்றம் விடுவித்தது. இது தொடர்பான கடிதம் மதுரை மத்திய சிறைக்கு இன்று மாலை அல்லது நாளை சென்று விடும். இதையடுத்து நிர்மலா தேவி மதுரை சிறையில் இருந்து நாளை வெளியே வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nirmala Devi ,jail ,Madurai , Nirmala Devi, Madurai jail, Virudhunagar, bail
× RELATED மாணவிகளை தவறாக வழிநடத்த...