சென்னை: மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் கரும்பு விவசாயி சின்னத்தை சீமான் வெளியிட்டார். விவசாயம் தொடர்பான சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சீமான் கோரிக்கை விடுத்த நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கி கடந்த 15ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் 23-ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் அறிவித்தார். சென்னையில் தமது கட்சிக்கான சின்னத்தை வெளியிடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சீமான் கூறியதாவது, இந்தத் தேர்தலில் நமக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைத்துள்ளது என்றும் தேர்தலில் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் எனவும் கட்சி தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, வரும் 23-ம் தேதி, நாம் தமிழர் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறினார். அதில் 20 ஆண் வேட்பாளர்கள் மற்றும் 20 பெண் வேட்பாளர்கள் இருப்பார்கள் என தெரிவித்தார். இந்த தேர்தல் மட்டுமில்லாமல் இனி வரும் தேர்தல்களில் பெண்களுக்கு சமவாய்ப்பு தருவதாக அவர் கூறியுள்ளார். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் பெண்களுக்கு தனித்தொகுதி கேட்டு கோரிக்கை முன்வைக்கப்படும் என கூறினார். இதனை தொடர்ந்து மார்ச் 25ம் தேதியிலிருந்து தேர்தல் பரப்புரை தொடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த தேர்தல்களில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி