வேட்பு மனு தாக்கலின்போது விதிமீறும் கட்சிகள் மீது நடவடிக்கை: தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

சென்னை: நாடாளுமன்ற மற்றும் ஒரு சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கலின்போது விதிகளை மீறும் கட்சிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரி எச்சரித்துள்ளார். தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தமிழகம் முழுவதும் இன்று தொடங்குகிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள வடசென்னை, மத்தியசென்னை, தென்சென்னை ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வடசென்னை நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலராக வடக்கு வட்டார துணை ஆணையர் திவ்ய தர்ஷினி நியமிக்கப்பட்டுள்ளார். வடசென்னை தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய விரும்பும் வேட்பாளர்கள் எண் 62, பேசின் பாலம் சாலை, பழைய வண்ணாரப்பேட்டை என்ற முகவரியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

அதேபோன்று தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு எண் 115, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு என்ற முகவரியில் உள்ள தெற்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். இத்தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலராக தெற்கு வட்டார துணை ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய சென்னை தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலராக மத்திய வட்டார துணை ஆணையர் ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார். எண் 32பி, 2வது குறுக்குத் தெரு, புல்லா அவென்யூ, ஷெனாய் நகர் என்ற முகவரியில் உள்ள அவரது அலுவலகத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய விரும்புபவர்கள் எண் 1/1, ஷர்மா நகர் 1-வது பிரதான சாலை பெரம்பூர் என்ற முகவரியில் உள்ள சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் கருணாகரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும், மீறும் கட்சிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

கடைபிடிக்க வேண்டிய விதிகள்

தேர்தல் அலுவலகத்திலிருந்து 100 மீட்டருக்குக்குள் 3 வாகனங்களை மட்டும் அனுமதிக்க வேண்டும்.

* வேட்பாளருடன் சேர்த்து 5 பேரை மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்

* பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில்தான் வேட்புமனுக்களை பெற வேண்டும்

* இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் வீடியோ மூலம் பதிவு செய்ய வேண்டும்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: