தாம்பரம்: நன்மங்கலம் காப்புக்காட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதால் ஏராளமான மரங்கள் எரிந்து நாசமானது. தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தாம்பரம் அடுத்த செம்பாக்கம் - திருமலை நகர் சாலையோரம் நன்மங்கலம் காப்புக்காடு உள்ளது. நேற்று மாலை சுமார் 3 மணியளவில் இந்த காட்டின் ஒரு பகுதியில், வேங்கை வாசல்பகுதி அருகில் உள்ள தனியார் கல்லூரியின் பின்புறம் உள்ள மைதானம் அருகில் திடீரென தீ ஏற்பட்டது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவி செம்பாக்கம் - திருமலை நகர் செல்லும் வனப்பகுதி சாலை வரை தீ பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதனால், நன்மங்கலம் காப்புக்காட்டின் அருகில் உள்ள செம்பாக்கம், திருமலை நகர், மேடவாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகள் முழுவதும் புகை சூழ்ந்து காணப்பட்டது.