சென்னை: குட்கா முறைகேடு தொடர்பான ஆவணங்களை மறைத்த விவகாரத்தில் டிஜிபியின் பதவி நீட்டிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், குட்கா முறைகேடு தொடர்பான ஆவணங்களை திட்டமிட்டு மறைத்த டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பதவிநீட்டிப்பு பெற்றுள்ளார். குட்கா முறைகேடு தொடர்பான வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, டி.கே.ராஜேந்திரன் மீதான லஞ்சப்புகார் குறித்த வருமான வரித்துறையின் கடிதம், கோப்புகளை ஆராய்ந்த போது கிடைக்கவில்லை என தமிழக தலைமை செயலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆவணங்கள் அனைத்தும் போயஸ் கார்டனில் கடந்த 2017 நவம்பரில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தபோது கிடைத்தன. டிஜிபியை தப்ப வைக்கவே இந்த ஆவணங்கள் மறைக்கப்பட்டுள்ளன. எனவே, அவருக்கு பதவி நீட்டிப்பு கொடுத்ததை ரத்து செய்ய வேண்டும். குட்கா முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த புதிய டிஜிபியை நியமிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.