திருத்தணி திமுக சட்டமன்ற தொகுதி செயல்வீரர் கூட்டம் நேற்று அகூர் நத்தம் கிராமத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திமுக பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது: திமுக தலைவர் ஸ்டாலின், ‘’நமது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ஜெகத்ரட்சகனை ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்து கொள்கிறேன். நீங்கள் என்னுடன் இருந்து கொள்ளுங்கள்’’ என்று கூறி விட்டார். இதற்கு ஜெகத்ரட்சகனும் சரி என்று கூறிவிட்டார். ஆனால் இரண்டு தினங்கள் கழித்து ஜெகத்ரட்சகன் என் வீட்டிற்கு கண்ணீரோடு வந்தார். நான் என்னவோ, ஏதோ என்று பதறிப் போய் விட்டேன். அப்போது ஜெகத்ரட்கன் கூறினார், ‘’அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கட்சியினரும், பொதுமக்களும் என் வீட்டு வாசலில் ஆயிரக்கணக்கானோர் கூடியுள்ளனர். நீங்கள் வேட்பாளராக வராவிட்டால் உங்கள் வீட்டு முன்பு தீக்குளிப்போம் என்று கண்ணீருடன் கூறுகின்றனர். இதனால் என்ன செய்வது என்று தெரியவில்லை’’ என்று கூறினார். வேறு வழியில்லாமல் மீண்டும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினராக திமுக சார்பில் போட்டியிடுவதாக அவர் தெரிவித்தார்.