புதுடெல்லி: எரிக்சன் நிறுவனத்துக்கு பாக்கி வழங்காவிட்டால் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்திருந்த நிலையில், ₹458,77 கோடி பாக்கியை முகேஷ் அம்பானி உதவியுடன் அனில் அம்பானி நேற்று செலுத்தினார்.அனில் அம்பானி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். எரிக்சன் நிறுவனத்துடன் இணைந்து இந்த நிறுவனம் செயல்பட்டது. நஷ்டம் ஆனதால் ₹45,000 கோடி கடன் சுமை ஏற்பட்டது. தொலைத்தொடர்பு துறைக்கு அலை வரிசை கட்டணம் ₹2,900 கோடி, எரிக்சன் நிறுவனத்துக்கும் ₹1,600 கோடி பாக்கி இருந்ததால், ஜியோ நிறுவனத்திடமும் விற்க முடியவில்லை. எரிக்சன் விவகாரத்தில் நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டு, ₹550 கோடியை பெற்றுக்கொள்ள எரிக்சன் சம்மதித்தது.ஆனால் நிலுவை தொகையை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் தரவில்லை. இதனால் எரிக்சன் நிறுவனம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கை 4 வாரம் முன்பு விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் தலைவர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் டெலிகாம் தலைவர் சதீஷ் சேத், ரிலையன்ஸ் இன்ப்ராடெல் தலைவர் சாயா விராணி ஆகியோர் நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளனர். அனில் அம்பானி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படுகிறது. கருவூலத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ₹118 கோடி செலுத்தியுள்ளது. இன்னும் 4 வாரத்துக்குள் மீதி பாக்கி தொகையை எரிக்சனுக்கு தராவிட்டால் 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தீர்ப்பளித்தார். நீதிபதி விதித்த 4 வார கெடு இன்று முடிகிறது.