சேலம்: தேர்தல் அதிகாரிகளின் ெகடுபிடியால் வெள்ளி உற்பத்தி 50 சதவீதம் சரிந்துள்ளதாக வெள்ளி வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். சேலத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளி கால்கொலுசு, அரைஞாண் கொடி, குங்குமச்சிமிழ், வெள்ளி தட்டு, டம்ளர் உள்ளிட்டவைகள் வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தில் பல இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த தொழிலை நம்பி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் வழங்குவதை தடுக்க, சேலம் மாவட்ட எல்லை மற்றும் உள் பகுதிகளில் தேர்தல் அதிகாரிகள், பறக்கும்படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வெள்ளி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சேலம் செவ்வாய்பேட்டை வெள்ளி வியாபாரிகள் கூறியதாவது: சேலத்தில் வெள்ளி தொழிலை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் உள்ளனர். 22 நிலையை கடந்து தான் கால் கொலுசு, அரைஞாண்கொடி உள்பட பல்வேறு வெள்ளிப்பொருட்கள் விற்பனைக்கு வருகின்றன. நாடாளுமன்ற தேர்தல் அமலுக்கு வந்தபின், கடந்த 11ம் தேதி முதல் தேர்தல் அதிகாரிகள், பறக்கும்படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.