புதுடெல்லி: எல்ஐசி நிறுவனத்தின் தலைவராக எம்.ஆர்.குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். இதுபோல், புதிய நிர்வாக இயக்குநர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட எம்.ஆர்.குமார், டெல்லி, ஹரியானா, இமாசல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களையும் சண்டிகார் யூனியன் பிரதேசத்தையும் உள்ளடக்கிய எல்ஐசியின் வடக்கு மண்டலத்துக்கு பொறுப்பு வகித்தவர். கடந்த 2017 ஏப்ரல் மாதம் முதல் இந்த பதவியில் இருந்தார். இதற்கு முன்பு இந்த நிறுவனத்தில் பென்ஷன் மற்றும் குழு திட்டங்களின் செயல் இயக்குநர் உட்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். வடக்கு மண்டலம் மட்டுமின்றி, சென்னையில் தென் மண்டலம் மற்றும் கான்பூரில் வட மத்திய மண்டலங்களின் தலைமை பொறுப்பை வகித்தவர். அகமதாபாத், எர்ணாகுளம் கோட்டங்களுக்கும் தலைமை பொறுப்பு வகித்தவர்.
இதுபோல் எல்ஐசின் நிர்வாக இயக்குநராக டி.சி.சுசீல் குமார் பொறுப்பேற்றுள்ளார். இவர் தென் மத்திய மண்டல பொறுப்பாளராகவும், ஆந்திரா, தெலங்கானா கர்நாடகா மாநிலங்களிலும் தலைமை பொறுப்பு வகித்துள்ளார். எல்ஐசியின் வாடிக்கையாளர் தொடர்பு நிர்வாகத்தில் செயல் இயக்குநர் உட்பட எல்ஐசியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை இவர் வகித்துள்ளார். எல்ஐசியின் நிர்வாக இயக்குநராக விபின் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இவர் மகாராஷ்டிரா, குஜராத், கோவ மற்றும் டாமன் டையூ, தாத்ரா நகர் ஹவேலியை உள்ளடக்கிய மேற்கு மண்டல மேலாளராக உள்ளார். இதற்கு முன்பு கிழக்கு மத்திய மண்டலத்தில் பாட்னாவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார் என எல்ஐசி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி