நியூசிலாந்து மசூதிகளில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 5 பேர் இந்தியர்கள் என தகவல்

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை இருவேறு மசூதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 49 பேரில் 5 பேர் இந்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள அல் நூர் மற்றும் இதன் அருகில் உள்ள லின்வுட் மசூதிகளில் நேற்று முன்தினம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 49 பேர் பலியாயினர். இவர்கள் துருக்கி, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இந்தோனேஷியா, மலேசியா, இந்தியா, சவுதி, ஜோர்டான், பாகிஸ்தான் உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

காயம் அடைந்த 39 பேர் கிறைஸ்ட்சர்ச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 2 வயது சிறுவன், 4 வயது சிறுமி ஆகியோர் அபாய நிலையில் உள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரன்டன் டாரன்ட்(28) என்பவரும் அவரது கூட்டாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய டாரன்ட், தனது தலையில் பொருத்தியிருந்த  கேமரா மூலம் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்துள்ளார். முன்னாள் உடற்பயிற்சி ஆசிரியரான இவர், வலதுசாரி தீவிரவாதியாக மாறியுள்ளார்.இவர்கள் மசூதியில் தாக்குதல் நடந்த 36 நிமிடங்களுக்குள், துப்பாக்கிச்சூடு நடத்திய பிரன்டன் டாரன்ட்டை நியூசிலாந்து போலீசார் மற்றும் பொதுமக்கள் பிடித்து விட்டனர்.

இல்லையென்றால் இன்னும் அதிகபேரை இவன் சுட்டு  கொன்றிருக்கலாம் எனத் தெரிகிறது. இவனது கூட்டாளிகள் என சந்தேகப்படும் டேனியல் பர்ரோ(18) மற்றும் ஒருவர் போலீசாரின் பிடியில் உள்ளனர். இவர்களில் பிரன்டன் டாரன்ட் மட்டும் நியூசிலாந்து நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். இவர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர் ஜாமீன்  கேட்கவில்லை. இதன் வழக்கு விசாரணை அடுத்த மாதம் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.  இவரது கூட்டாளி டேனியல் ப்ரரோ மீது கொலையை தூண்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மற்றொரு நபரின் பங்கு குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆயுத சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ஜசிந்தா ஆர்டர்ன் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: