தஞ்சை: தஞ்சையில் டிக்டாக் வீடியோ எடுத்தவாறு பைக்கில் பயணம் செய்த தனியார் கல்லூரி மாணவன் விபத்தில் சிக்கி பலியானார். அவருடன் பயணம் செய்த 2 மாணவர்கள், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து தப்பியோடினர்.தஞ்சை மாவட்டம் பூதலூர் ஜெகன்மோகன் நகரை சேர்ந்தவர் சூர்யா (18). இவர் தஞ்சையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவரது நண்பர்கள் அபிஷேக் (19), ரீகன் (18). இவர்கள் 3 பேரும் கடந்த 17ம் தேதி பைக்கில் தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் புதிய பஸ்ஸ்டாண்ட் நோக்கி சென்றனர். பைக்கை சூர்யா ஓட்டி சென்றார். அவ்வாறு பைக்கில் சென்றவர்கள் டிக்டாக் வீடியோவை எடுத்து கொண்டு சென்றதுடன் ஹெல்மெட் அணியாமல் அச்சுறுத்தும் வகையில் அதிக வேகமாகவும், சாலையில் அங்கும், இங்கும் வளைத்தவாறும் பைக்கை ஓட்டி சென்றனர். ஆர்.ஆர். நகர் பஸ்ஸ்டாப் அருகே எதிரே வந்த காரை பார்த்து சூர்யா பைக்கை வேகமாக திருப்பினார்.
அப்போது சாலையோரம் நின்ற மினி பஸ்சின் பின்புறத்தில் பைக் மோதியது. இதில் தடுமாறி விழுந்த 3 பேரும் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சையில் இருந்தபோது தாங்கள் எடுத்த டிக்டாக் வீடியோவை அப்லோடு செய்துள்ளனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி சூர்யா இறந்தார். அவர்கள் எடுத்த டிக்டாக் வீடியோ அப்லோடு ஆகி அனைவரும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீசாருக்கு கிடைத்ததும் வழக்குப்பதிந்து விசாரணை தொடங்கினர். இதன்பின், சிகிச்சையில் இருந்த 2 மாணவர்களிடம் விசாரணை நடத்த நேற்று முன்தினம் போலீசார் சென்றனர். ஆனால் இதையறிந்ததும் அபிஷேக், ரீகன் ஆகியோர் மருத்துவமனையில் இருந்து சென்று விட்டனர். அவர்களை தேடி வருகின்றனர். அவர்கள் பிடிபட்டால் மட்டுமே வீடியோவை குறித்த பல உண்மைகள் வெளிவரும் என்று போலீசார் ெதரிவித்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி