பெங்களூரு: ஆபரேஷன் தாமரை மூலம் மஜத எம்.எல்.ஏ.வை பாஜவிற்கு இழுக்கும் முயற்சியாக எடியூரப்பா பேசிய ஆடியோ விவகாரத்தில் விசாரணை நடத்த கலபுர்கி உயர் நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. கர்நாடகாவில் ஆபரேஷன் தாமரை திட்டம் மூலம் காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்களை பாஜவுக்கு இழுக்கும் முயற்சியில் எடியூரப்பா ஈடுபட்டு இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடந்த 7ம் தேதி இரவு சித்ரதுர்காவில் மஜத எம்.எல்.ஏ. நாகனகவுடாவின் மகனுடன் எடியூரப்பா பேரம் பேசியதாவும், அப்போது பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான ஆடியோவை முதல்வர் குமாரசாமி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.