சென்னை: சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 13 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை லிப்ட் ஆப்ரேட்டர்கள், வாட்ச் மேன்கள் என்று 17 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இவர்கள் அனைவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேற்கண்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 14பேர் தரப்பில் மட்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதில், ‘சிறுமி பலாத்காரம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஒரு இடைக்கால உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தனர். இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில்,”சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ.க்கோ அல்லது வேறு நீதிமன்ற அமர்விற்கோ மாற்றியமைக்க முடியாது. இதில் குற்றவாளிகளான அனைவரும் வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவர்களது அனைத்து மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது’ என கூறினர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி