எழும்பூர் ரயில் நிலைய டிக்கெட் கவுன்டரில் கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு: வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

சென்னை: எழும்பூர் ரயில் நிலைய டிக்ெகட் கவுன்டர் அருகே கோட்பாரற்று கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து பெட்டியை அப்புறப்படுத்தினர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு வழக்கத்தைவிட பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் 4வது நடைமேடை அருகே உள்ள டிக்கெட் கவுன்டர் அருகே கேட்பாரற்று ஒரு பெட்டி கிடந்தது. சிறிது நேரத்தில் அந்த பெட்டிக்குள் இருந்து அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் இதுபற்றி ரயில்வே போலீஸ் உதவி மையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், எழும்பூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அந்த பெட்டியை கைப்பற்றி பயணிகள் உடமைகள் ஸ்கேன் செய்யும் இயந்திரத்தில் வைத்து சோதனை செய்தனர்.

அப்போது அதில் வயர் உள்ளிட்ட பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வெடிகுண்டாக இருக்குமோ? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ரயில்வே போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் பெட்டியை சோதனை செய்தனர். அப்போது அந்த பெட்டியில் எந்த ஒரு ஆபத்தான பொருட்களும் இல்லை என்று உறுதி செய்தனர். இதையடுத்து அந்த பெட்டியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இச்சம்பவத்தால் எழும்பூர் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: