போர்ட் எலிசபத்: தென் ஆப்ரிக்க அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணிக்கு 197 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 222 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. மார்க்ராம் 60, கேப்டன் டு பிளெஸ்ஸி 25, டி காக் 86, ரபாடா 22 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர் (3 பேர் டக் அவுட்). அடுத்து களமிறங்கிய இலங்கை, முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 60 ரன் எடுத்திருந்தது. இரண்டாம் நாளான நேற்று அந்த அணி 154 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. டிக்வெல்லா அதிகபட்சமாக 42 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் ரபாடா 4, ஒலிவியர் 3, முல்டர், மகாராஜ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து, 68 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா, 44.3 ஓவரில் வெறும் 128 ரன் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. மார்க்ராம் 18, அம்லா 32 ரன் எடுக்க, கேப்டன் டு பிளெஸ்ஸி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 50 ரன் (70 பந்து, 7 பவுண்டரி) எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். இலங்கை பந்துவீச்சில் லக்மல் 4, தனஞ்ஜெயா 3, ரஜிதா 2, விஷ்வா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 197 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி 2வது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது. இரண்டே நாளில் 30 விக்கெட் சரிந்ததால், மூன்றாம் நாளான இன்று ஆட்டம் முடிவுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி