சென்னை: விஜயகாந்தை சந்தித்தது உடல் நலம் விசாரிப்பதற்காகத்தான். அரசியல் பேச வரவில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார். சிகிச்சை முடிந்து சில தினங்களுக்கு முன் சென்னை திரும்பினார். திமுக தலைவரும் எதிர்க்கட்சிதலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று விஜயகாந்தை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.பின்னர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக இன்று அவரை நான் நேரில் சந்தித்தேன். அவரைவிட ஒரு வயது குறைவாக இருந்தாலும் அவர் என்னை மரியாதையோடு அன்போடு அண்ணன், அண்ணன் என்றுதான் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருக்கக்கூடியவர். அதையும் தாண்டி கலைஞர் மீது அளவு கடந்த பாசமும் அன்பும், ஏன் பக்தியும் கொண்டிருந்தார். கலைஞர் மறைந்த நேரத்தில் விஜயகாந்த் வெளிநாட்டில் இருந்தார். வெளிநாட்டில் இருந்து வீடியோ மூலமாக இரங்கல் செய்தியைச் சொல்லுகிற போது, தாங்க முடியாத அளவிற்கு சோகத்தில் மூழ்கி அவர் அழுத காட்சி இன்றைக்கும் நம் மனதில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. அவர் வெளிநாட்டில், சிகிச்சை முடிந்து இந்தியா வந்ததற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து நேரடியாக கலைஞருடைய நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்திய காட்சி, அவர் கலைஞரிடத்தில் எந்தளவிற்கு பற்று வைத்திருந்தார் என்பதை நன்றாக புரிந்துகொள்ள முடியும்.