வேலூர் : நாடு முழுவதும் ஆதார் அட்டை பெறவும், திருத்தம் மேற்கொள்ளவும் தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்கள், அனைத்து தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்கள் ஆகிய இடங்களில் ஆதார் நிரந்தர சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த ஆதார் சேவை மையங்களில் புதிய சாப்ட்வேர் அப்டேட் செய்ய உத்தரவிடப்பட்டது. இதற்காக 18ம்தேதி முதல் நேற்று முன்தினம் வரை 3 நாட்கள் ஆதார் சேவை மையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு மாவட்டமாக அப்டேட் செய்யும் பணி நடந்து வருவதால் பணிகள் முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஆதார் மையங்களுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஐடி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சர்வர் பழுதாகும் போதெல்லாம் ஆதார் பணிகளில் இடர்பாடுகள் ஏற்படுகிறது. இதனால் அந்த ஐடியில் புதிய சாப்ட்வேர் அப்டேட் செய்து புதிய தொழில்நுட்பத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் கடந்த 18ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதனால் ஏற்னவே 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்று முதல் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த புதிய சாப்ட்வேர் அப்டேட் செய்யும் பணி முடியவில்லை. இதனால் வரும் 25ம் தேதி வரை விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு புதிய ஆதார் எடுக்கவோ, திருத்தங்களையோ மேற்கொள்ள முடியாது. எனவே பொதுமக்கள் யாரும் வர வேண்டாம். இந்த புதிய சாப்ட்வேர் அறிமுகப்படுத்திய பிறகே அதற்கான அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி