வரகனூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலி : உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிதி உதவி

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சாத்தூர் அருகே உள்ள வரகனூரில் பட்டாசு ஆலை சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கும் உரிமத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 10 அறைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த 10 அறைகளில் இன்று காலை வழக்கம் போல சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கும் பணியும் அனுமதியின்றி பெரிய ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது ஆலையில் மாலை 3 மணியளவில் வெடிகள் சேமித்து வைத்திருக்கும் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து வெகு விரைவில் மற்ற அறைகளுக்கும் பரவியுள்ளது. இந்த விபத்தில் இந்த ஆலையில் உள்ள அனைத்து அறைகளும் தரைமட்டமாயின. இந்த விபத்தில் 40-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும், 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சம்பவ இடத்தை விருதுநகர் மற்றும் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகரும் பார்வையிட்டனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறும், வெடிவிபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலை உரிமம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000; லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25,000 நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: