சென்னை : தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கிராம மக்களிடம் குறைகளை கேட்டு வருகிறார். இந்நிலையில் திமுகவின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் சேர்க்க பொதுமக்கள் கருத்து சொல்லலாம் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக முன்னேற்றத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு ஒரு வாய்ப்பு என்று ஸ்டாலின் அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பொதுமக்கள் புதுமையான எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை dmkmanifesto2019@dmk.in என்ற இணையதள முகவரிக்கு அனுப்பலாம் என்று அவர் தகவல் அளித்துள்ளார். மேலும் #DMKmanifesto2019 என்ற ஹெஷ்டேக்கிலும் மக்கள் தங்களது எண்ணங்களை பிப்., 28ம் தேதிக்குள் அனுப்பலாம் என தெரிவித்துள்ளார்.