திருவனந்தபுரம்: ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் புகழ்பெற்ற பொங்கல் வழிபாடு நேற்று நடந்தது. இதில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டனர்.பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் பிரசித்திப்பெற்ற திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் இந்த ஆண்டுக்கான பொங்கல் திருவிழா கடந்த 12ம் தேதி அம்மனை காப்பு கட்டி குடியிருத்தும் சடங்குடன் தொடங்கியது. விழாவில் தினமும் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. கோயில் அரங்கில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை பிரபல நடிகர் மம்மூட்டி தொடங்கி வைத்தார். திருவிழா தொடங்கிய தினம் முதல் கேரளா மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
9ம் நாள் விழாவான நேற்று பிரசித்திப்பெற்ற பொங்கல் வழிபாடு நடந்தது. இதையொட்டி காலை 10.20 மணியளவில் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அடுப்பில் கோயில் தந்திரி பரமேஸ்வரன் வாசுதேவன் பட்டதிரிப்பாடு மற்றும் மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி ஆகியோர் தீப்பற்ற வைத்தனர். பின்னர் கோயிலை சுற்றி பல கி.மீ. அளவில் லட்சக்கணக்கான பெண்கள் தங்களது பொங்கல் அடுப்புகளில் தீ மூட்டினர். பிற்பகல் 2.15 மணியளவில் பொங்கல் பானைகளில் புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதன் பிறகே பக்தர்கள் ஊருக்கு திரும்ப தொடங்கினர்.
பொங்கல் விழாவை முன்னிட்டு பல லட்சம் பெண்கள் குவிந்ததால் திருவனந்தபுரம் நகரில் தென் மண்டல ஏ.டி.ஜி.பி. மனோஜ் ஆபிரகாம் தலைமையில் கோயிலை சுற்றிலும் 3,700 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
ேமலும் 100 பெண் கமாண்டோ வீராங்கனைகள் உட்பட 1,200 பெண் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில் மற்றும் பஸ் வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. பக்தர்களால் திருவனந்தபுரத்தில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. விழாவில் கேரள கவர்னர் சதாசிவத்தின் மனைவி சரஸ்வதி சதாசிவம், நடிகைகள் ஜலஜா, சிப்பி, கிருஷ்ணபிரபா உட்பட ஏராளமான பிரபலங்கள் பொங்கலிட்டனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி