நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள மாரியம்மன்கோயிலில் மாசி பெருந்திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள் அதிகாலையில் பக்தர்கள் உலுப்பக்குடி அருகிலுள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து கோயிலுக்கு வந்து காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். அன்றிரவு அம்மன்குளத்திலிருந்து கம்பம் நகர்வலமாக எடுத்து வந்து கோயிலில் ஸ்தாபிதம் செய்யப்பட்டது. விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடந்து வருகின்றன.
நேற்று அலங்கரிக்கப்பட்ட மின் ரதத்தில், அம்மன் சர்வ அலங்காரத்தில், சிம்ம வாகனத்தில் எழுந்தருளி நகர்வலம் வந்தார். வழி நெடுக காத்திருந்த பக்தர்கள், அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் வரும் 26ல் நடக்க உள்ளது. 27ம் தேதி காலையில் அம்மன் மஞ்சள் நீராடுதல் நடக்கிறது. அன்றிரவு அம்மன் சர்வ அலங்காரத்தில், பூப்பல்லக்கில் எழுந்தருளி நகர்வலம் வந்து கோயிலை சென்றடையும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தக்கார் மகேஸ்வரி, செயல் அலுவலர் பாலசரவணன், கோயில் பூசாரிகள் உள்ளிட்ட விழா குழுவினர் செய்து வருகின்றனர். சுகாதாரப் பணிகளை பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் தலைமையில் துப்புரவு ஆய்வாளர் சடகோபி உள்ளிட்ட பணியாளர்கள், ஊழியர்கள் செய்துள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் செய்து வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி