திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் ரப்பர் தொழிற்சாலை குடோன் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. எர்ணாகுளம் தெற்கு ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள தொழிற்சாலை கிடங்கில் இருந்து இன்று பிற்பகலில் திடீரென புகை வெளியேறியது. உடனடியாக சுதாரித்த சிலர் அங்கிருந்து வெளியேறிய நிலையில், தீ கட்டிடம் முழுவதும் பரவி எரிய தொடங்கியது. 5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக உருவான கரும்புகை அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் சூழ்ந்து வருகிறது. இதையடுத்து பக்கத்து கட்டிடங்களில் இருப்பவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு 18 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. தீயை அணைக்கும் முயற்சியிலும், உள்ளே சிக்கியவர்களை மீட்கும் முயற்சியிலும் தீயணைப்புத் துறை தீவிரம் காட்டி வருகிறது. இருப்பினும் கரும் புகை அதிகமாக சூழ்ந்து காணப்படுவதால், தீயை கட்டுப்படுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.