சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஷ்வர ராவ் விலகல்

டெல்லி : சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஷ்வர ராவ் விலகி கொண்டார்.

சாரதா சிட்பண்ட் மோசடி

மேற்கு வங்கத்தில் செயல்பட்டு வந்த சாரதா சிட்பண்ட் நிறுவனம் 17 லட்சம் அப்பாவி மக்களிடம் ரூ.30 ஆயிரம் கோடி மோசடி செய்திருப்பதாக குற்றம்  சாட்டப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புள்ள முக்கிய ஆவணங்களை தற்போது கொல்கத்தா போலீஸ் கமிஷனராக இருக்கும் ராஜீவ் குமார் அழித்து விட்டதாக  சிபிஐ குற்றம் சாட்டியது. இதையடுத்து கடந்த பிப்ரவரி 3ம் தேதி சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷ்னரிடம், விசாரணை நடத்த அவர் இல்லத்திற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர். அவர்களை கொல்கத்தா காவல்துறையினர் அனுமதிக்க மறுத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் சிபிஐ அதிகாரிகள் கமிஷ்னரை விசாரிக்க வந்ததை எதிர்த்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் கமிஷ்னர் ராஜீவ் குமார் ஆகியோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு

இதனிடையே சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையில் சிபிஐ மற்றும் மேற்கு வங்க அரசு இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் சிபிஐ சார்பாக உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மற்றும் நீதிபதிகள் நாகேஷ்வர ராவ், நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

கொல்கத்தா காவல் ஆணையர் ராஜிவ்குமாரிடம் விசாரணை

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, மேற்கு வங்க அரசு, கொல்கத்தா காவல் ஆணையர் ராஜிவ்குமார் மற்றும் அம்மாநில டிஜிபிக்கு  நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், சாரதா சிட்பண்ட் வழக்கு தொடர்பாக பொதுவான இடமான மேகாலயாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ராஜிவ் குமார் ஆஜராக வேண்டும் எனவும் அறிவுறுத்தியது. மேலும், இந்த வழக்கின் விசாரணையை வரும் 20ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, மேகாலயா மாநிலம், ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ராஜீவ் குமார் விசாரணைக்கு  ஆஜராகி, சிபிஐ அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். ராஜீவ் குமாரிடம் 4 நாட்களில் மொத்தம் 40 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.  

 உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஷ்வர ராவ் விலகல்

இந்நிலையில் சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஷ்வர ராவ் விலகி கொண்டார். நீதிபதி நாகேஷ்வர ராவ் இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கொல்கத்தா அரசு தரப்பு வழக்கறிஞராக தான் வாதாடியுள்ளதால் அரசுக்கு எதிரான இந்த வழக்கில் இருந்து தாம் விலகுவதாக நாகேஷ்வர ராவ் தெரிவித்தார்.அதை தொடர்ந்து சிபிஐயின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை வேறு ஒரு அமர்வு முன் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: