கோவை: கோவை அரசு மருத்துவமனையில் இரண்டு வயது பெண் குழந்தைக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டதாக குழந்தையின் தந்தை புகார் கூறியுள்ளார். திருச்சியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (28). இவரது மனைவி சித்ரா(25). இவர்களுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 6.3.2017ம் தேதி ஆண், பெண் என இரட்டை குழந்தை பிறந்தது. இதில், ஆண் குழந்தை ஆரோக்கியமாக இருந்தது. பெண் குழந்தை 700 கிராம் மட்டுமே இருந்ததால் தீவிர சிகிச்சையளித்தனர். இதில், 32 நாட்களுக்குப்பின் குழந்தையின் எடை 1400 கிராமாக அதிகரித்தது. இதன்பிறகு குழந்தையை பெற்றோர் வீட்டுக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில், விஸ்வநாதன் தன் குடும்பத்துடன் திருப்பூருக்கு இடம் பெயர்ந்து விசைத்தறி கூடத்தில் பணிபுரிந்துவந்தார். பெண் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கடந்த 11.7.18 அன்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு இருதய நோய் இருப்பதாக கூறி அன்றே கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிறகு, கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சையளித்த டாக்டர்கள், இதயத்தில் ஓட்டை இருப்பதாக தெரிவித்துள்ளனர். 12ம் தேதி இரவு குழந்தைக்கு ரத்தம் ஏற்றினர். சிகிச்சைக்கு பின், குழந்தையை 13ம் தேதி டிஸ்சார்ஜ் செய்தனர். இந்நிலையில் கடந்த 8ம் தேதி குழந்தையின் உடலில் சிறு கட்டிகள் ஏற்பட்டதால் கோவை அரசு மருத்துவமனையில் மீண்டும் அனுமதித்தனர். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், எச்ஐவி இருக்கிறது என்றனர். இதனால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். கோவை அரசு மருத்துவமனையில் செலுத்தப்பட்ட ரத்தத்தில் பரவியிருக்கும் என்று இருவரும் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து, விஸ்வநாதன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: குழந்தையின் இருதயத்தில் ஓட்டை உள்ளது. அதற்காக ரத்தம் ஏற்ற வேண்டும் என தெரிவித்தனர். நாங்கள், கோவை அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றியுள்ளதால் குழந்தைக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டுள்ளது. இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்த போது, வேறு எந்த மருத்துவமனையிலாவது சிகிச்சை பெற்றபோது எச்ஐவி தொற்று ஏற்பட்டிருக்கலாம் என கூறி புகாரை பெற முடியாது என தெரிவித்து விட்டனர். உரிய ஆதாரங்கள் இருப்பதால் இது குறித்து மக்கள் கண்காணிப்பகம் மற்றும் வக்கீல்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட என் குழந்தைக்கு உரியசிகிச்சை அளிக்க வேண்டும். அரசு மருத்துவமனை ஊழியர்களின் அஜாக்கிரதையால்தான் இது போன்று ஏற்படுகிறது. எனவே இது குறித்து சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு விஸ்வநாதன் கூறினார். டீன் விளக்கம்: அவரது குற்றச்சாட்டுக்கு கோவை அரசு மருத்துவமனை டீன் அசோகன் கூறுகையில், `இந்த குழந்தை திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்தபோது 700 கிராம் எடைதான் இருந்தது. பிறகு பல்வேறு மருத்துவமனைகளில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த 11.7.18ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது குழந்தைக்கு பேக்ட் செல்(ரத்த சிவப்பணுக்கள்) 50மிலி மட்டும் ஏற்றப்பட்டது. எச்ஐவி ரத்த சிவப்பணுக்கள் மூலம் பரவ வாய்ப்பு இல்லை. பிளாஸ்மா மூலம் தான் எச்ஐவி தொற்று பரவும். குழந்தைக்கு ஏற்பட்ட பேக்ட் செல் வேலூர் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி சோதனை செய்தோம். ரத்தம் முகாமின் மூலம் பெறப்பட்டது. அந்த கொடையாளரிடமும் சோதனை செய்ததில் அவருக்கு எச்ஐவி தொற்று இல்லை எனநிரூபணமாகியுள்ளது. எனவே, கோவை அரசு மருத்துவமனையின் மூலம் குழந்தைக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்படவில்லை. எச்ஐவி பாதித்துள்ள குழந்தைக்கு தற்போது ஏஆர்டி சென்டரில் சிகிச்சை அளிக்கப்படுகிறது’ என்று விளக்கமளித்தார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி