புதுடெல்லி: சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமனத்தை எதிர்த்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சி.பி.ஐ.யின் இயக்குநராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானா இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து இருவரும் விடுப்பில் அனுப்பப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இடைக்கால இயக்குநராக நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டார். அவர் இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பிரபல மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் இந்த மனுவை தாக்கல் செய்தார். அதில் அவர், “சி.பி.ஐ. இயக்குனராக நாகேஷ்வர ராவ் விதியை மீறி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அதை கவனத்தில் கொள்ளாமல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எனவே அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.