×

அய்யம்பாளையம் மருதாநதி அணை வறண்டது : 30 கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

பட்டிவீரன்பட்டி: அய்யம்பாளையம் மருதாநதி அணை வறண்டுவிட்டதால் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையம் மருதாநதி அணை உள்ளது. அணையின் மொத்த உயரம் 72 அடியாகும். இந்த அணைக்கு தாண்டிக்குடி மலைப்பகுதி, பண்ணைக்காடு, பாச்சலூர், கடுகுதடி போன்ற மலைப்பகுதி மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி போன்றவற்றில் பெய்யும் மழைநீர் ஆதாரமாகும். கஜா புயலின் காரணமாக கடந்த ஆண்டு அணை நிரம்பியது. அதன்பின்பு மழை பெய்யாத காரணத்தினால் அணையில் உள்ள தண்ணீர் வற்றிவிட்டது. இதனால் ஆடு, மாடுகளின் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது.

அணை தண்ணீர் மூலமாக நிலக்கோட்டை, ஆத்தூர் ஆகிய இரண்டு தாலுகாக்களை சேர்ந்த சுமார் 7 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெற்று வந்தன. மேலும் அணையின் உட்புறம் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகள் மூலமாக பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சேவுகம்பட்டி போன்ற பேரூராட்சிகளுக்கும், சித்தரேவு, அய்யன்கோட்டை, தேவரப்பன்பட்டி போன்ற ஊராட்சி பகுதிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கும் குடிதண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. அணை வற்றி விட்டதால் இந்த கிராம பகுதிகளுக்கு கோடையில் குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தற்போது அணை வற்றிவிட்டது. கடல்போல் காட்சியளித்த அணை தற்போது குளம்போல் காட்சியளிக்கின்றது. ஆயிரம் கன அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. அணையில் 20 அடிக்கு சகதி மற்றும் மணல் குவிந்துள்ளது. இதனால் அணையில் தற்போதுள்ள நீர் இருப்பான 30 அடியில் 20 அடியை கழித்தால் 10 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. விவசாயிகள் கூறுகையில், ‘‘இந்த அணை கட்டப்பட்டு சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அணை 179 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 1074 மில்லியன் கனஅடி தண்ணீரை தேக்கமுடியும். ஆனால் அணையை தூர்வார நடவடிக்கை இல்லை. மேலும் தண்ணீர் வரும் காலங்களில் தண்ணீருடன் வரும் மண், களிமண் போன்றவை சுமார் 20 அடி வரை தேங்கியுள்ளது. இதனால் நீர் பிடிக்கும் அளவு நாளுக்கு நாள் குறைந்துவருகின்றது. இந்த வறண்ட சமயத்தில் அணையில் உள்ள மணலை ஏலம் விட்டு தூர்வார வேண்டும். அணையில் உள்ள பூங்கா பகுதிகளை சீரமைக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ayyambalayam Marutanadi , Ayyampalaiyam, marutanati dam, water
× RELATED முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில்...