போலி பாஸ்போர்ட், விசா தயாரித்த கும்பல் கைது: சென்னையை சேர்ந்தவர் உட்பட 5 பேர் ஐதராபாத்தில் சிக்கினர்

ஐதராபாத்: போலி பாஸ்போர்ட் மற்றும் விசா தயாரித்த சென்னையை சேர்ந்த ஒருவர் உட்பட 5 பேர் கொண்ட கும்பலை ஐதராபாத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 88 போலி பாஸ்போர்ட் மற்றும் விசாக்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதனை தயாரிப்பதற்காக அவர்கள் வைத்திருந்த கணினி உள்ளிட்ட தளவாடங்களுடன் 3 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போலி விசா தயாரிக்கும் கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட முகமது அப்துல் ரஹிம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் என ஐதராபாத் காவல் ஆணையர் அஞ்சனிகுமார் தெரிவித்துள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட 5 பேரில் சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த முகமது ஷேக் இலியாஸ் என்பவரும் ஒருவராவார். இவர்கள் போலியான ஆவணங்களை வைத்து சட்டவிரோதமாக அலுவலகம் நடத்திவந்ததாகவும் அஞ்சனிகுமார் தெரிவித்தார்.

கனடா, பிரான்ஸ் மற்றும் அரபு நாடுகளுக்கு செல்வதற்கான விசா வழங்குவதற்கு 4 லட்சம் ரூபாய் வாங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பாஸ்போர்ட் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக வசூலித்துள்ளனர். வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோர் போலியான நிறுவனங்களை நாட வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: