சென்னை: இன்ஜினியரிங் மாணவர்களை மிரள வைக்கும், போர்ட் ரூம் என்ற மர்ம அறை குறித்து, ரகசிய கண்காணிப்பு நடத்த அண்ணா பல்கலை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகள், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இன்ஜினியரிங்யின் அங்கீகாரத்தில் செயல்படுகின்றன. அங்கீகாரம் பெறும் கல்லுாரிகள், தமிழகத்தில், அண்ணா பல்கலையின் இணைப்பு அந்தஸ்துடன், அண்ணா பல்கலை பாட திட்டத்தில் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகளில் அண்ணா பல்கலையின் கவுன்சிலிங் வழியாகவும், தனியார் கல்லுாரிகளின் நிர்வாக இட ஒதுக்கீட்டிலும், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேரும் மாணவர்கள், கடும் அவதிக்கு ஆளாகின்றனர். சரியாக பேராசிரியர்கள் இல்லாமை, பாடங்களை முறையாக நடத்தாதது, வசூலித்த தேர்வு கட்டணத்தை பல்கலைக்கு செலுத்தாதது என கல்லுாரிகள் மீது பல புகார்கள் எழுந்துள்ளன. சமீபகாலமாக இன்ஜினியரிங் கல்லுாரிகளில் செயல்படும், போர்ட் ரூம் மாணவர்களை மிரள வைத்துள்ளது. அதாவது சில இன்ஜினியரிங் கல்லுாரிகளின் கேன்டீனில் உணவு பொருளுக்கு அதிக விலை வைப்பது, தேர்வு எழுத கூடுதல் கட்டணம் கேட்பது ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி பிரேக்கேஜ் என்ற பெயரில் திடீர் அபராதம் விதிப்பது போன்ற வசூல் வேட்டைகள் மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.