சென்னை: தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரம் பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம், ஆயிரத்திற்கும் மேல் ரொக்கமாக வசூலிக்க கூடாது என்ற உத்தரவு ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. ஆனால், இந்த நடைமுறையை பின்பற்றாமல் லட்சக்கணக்கில் ரொக்கமாக பணம் பெறப்படுவதாக கூறப்படுகிறது. இதில், கணக்கில் வராத பணம் லட்சக்கணக்கில் புழங்குவதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து அப்போது பதிவுத்துறை ஐஜியாக இருந்த குமரகுருபரன் பணம் இல்லாத பரிவர்த்தனை கொண்டு வர உத்தரவிட்டார். அதன்படி, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வாயிலாக கட்டணம் வசூலிக்கும் வகையில் எஸ்பிஐ வங்கி மூலம் பிஓஎஸ் கருவி நிறுவப்பட்டது. தமிழகம் முழுவதும் 575 அலுவலகங்களுக்கு தலா 1 வீதம் பிஓஎஸ் கருவி வழங்கப்பட்டுள்ளது. இந்த கருவிகள் மூலம் பிப்ரவரி 18ம் தேதி முதல் பதிவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜியாக இருந்த குமரகுருபரன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இந்த திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.