ஆலந்தூர்: சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் கணினி மயமாக்கப்பட்ட நுண்கருவி பிரிவு மற்றும் புதிய கட்டிடம், சைதை தொகுதி எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். பின்னர் கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட ஒரு சிறுவனுக்கு, மருத்துவர் முன்னிலையில் நுண்கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ பேசியதாவது:தினசரி ஆயிரக்கணக்காக மக்கள் மருத்துவ பயன்களை பெறுகின்ற மிகப்பெரிய மருத்துவமனையாக இந்த மருத்துவமனை உள்ளது. இங்கு கணினி மயமாக்கப்பட்ட நுண்கதிர் கூடம் மற்றும் புதிய கட்டிடம் மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.