சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியின் நிலை என்ன என்பது பற்றி விரைவில் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் இருந்து நேற்று காலை 10.30 மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்தார். பின்னர் அவர், காரில் புதுச்சேரி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, கடந்த சில தினங்களாக கவர்னர் மாளிகை முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுனர் கிரண்பேடி, மக்கள் நல திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதோடு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அம்மாநில அரசுக்கு பல்வேறு தொல்லைகளையும் கொடுத்து வருகிறார். இதேபோன்ற நிலைதான் டெல்லியிலும் நடந்து வருகிறது. டெல்லி மாநில துணை நிலை ஆளுனரும் எங்களது அரசுக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறார்.