டாஸ்மாக் ஊழியரை சுட்டு பணம் பறிப்பு கொள்ளையன் வீட்டில் மேலும் 2 துப்பாக்கிகள்: சென்னை ரவுடியிடம் வாங்கியதாக தகவல்

தர்மபுரி: அரூர் அருகே, டாஸ்மாக் விற்பனையாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி பணம் பறித்த 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கொள்ளையர்கள் சென்னையைச் சேர்ந்த ரவுடியிடம் துப்பாக்கி வாங்கியது தெரியவந்துள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே நரிப்பள்ளியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மகரஜோதி(44). டாஸ்மாக் விற்பனையாளரான இவர், கடந்த 16ம் தேதி இரவு மது விற்பனை தொகை ரூ1.50 லட்சத்தை எடுத்துக் கொண்டு நரிப்பள்ளி நோக்கி பைக்கில் சென்றபோது, மற்றொரு பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 3 பேர், மகரஜோதியை துப்பாக்கியால் சுட்டு பணத்தை பறித்துக் கொண்டு தப்பினர். இதுதொடர்பாக தனிப்படை போலீசார், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்த வெங்கடேசன்(32), ரெட்டிப்பட்டியைச் சேர்ந்த பரதன்(24) ஆகியோரை ைகது செய்து, ரூ80 ஆயிரம், நவீன ரக கைத்துப்பாக்கி, 3 தோட்டாக்கள், பைக்கை பறிமுதல் செய்தனர்.   கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா காட்டேரி பகுதியில்,

டாஸ்மாக் ஊழியர்கள் இருவரை, நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு ரூ3 லட்சம் கொள்ளை, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா பெருமட்டம் பகுதியில் டாஸ்மாக் ஊழியர்கள் மீது, கடந்த ஜனவரி 25ம் தேதி தாக்குதல் நடத்தி, பணம் பறிக்கும் முயற்சி சம்பவங்களிலும் இவர்களுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே, ஊத்தங்கரை வெங்கடேசன் வீட்டில் நடத்திய சோதனையில் மேலும் ஒரு நவீன ரக கைத்துப்பாக்கியும்,  ஒரு நாட்டுத் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஊத்தங்கரை அருகே டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் கொள்ளையடித்த பணம் ரூ3 லட்சத்தில் இருந்து, சென்னை ரவுடி ஒருவரிடம் நவீன ரக துப்பாக்கியை வெங்கடேசன் வாங்கியுள்ளார். இவர் வீட்டில் வளர்க்கும் சண்டைக் கோழிகளை விற்பனை செய்யும் போது, வட மாநில கொள்ளைக்கும்பலிடம் இருந்தும் துப்பாக்கிகளை வாங்கினாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: