மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் அணியுடனான பயிற்சி ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து மகளிர் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கு பயிற்சி பெறும் வகையில் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் அணியுடன் நேற்று மோதியது.மும்பை, வாங்கடே மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த வாரியத் தலைவர் லெவன் அணி 49 ஓவரில் 154 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. மின்னு மணி அதிகபட்சமாக 28 ரன் எடுத்தார். பாரதி புல்மாலி 23, ஹர்லீன் தியோல் 21, கேப்டன் ஸ்மிரிதி மந்தனா 19, பிரியா பூனியா 15 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஷ்ரப்சோல் 4, எல்விஸ் 2, எக்லஸ்டோன், ஹார்ட்லி, லாரா மார்ஷ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.