தி ஹேக்: சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவ் வழக்கு விசாரணை, நேற்று தொடங்கியது. இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ்(48). இவர் உளவு பார்த்ததாகவும், ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகவும் கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து ஜாதவிற்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம், கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. ஜாதவ் மீதான பாகிஸ்தானின் குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. கடற்படையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அவர், ஈரானில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்ததாகவும், அப்போது அவர் கடத்தப்பட்டதாகவும் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜாதவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து இந்தியா தொடர்ந்த வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றத்தின் 10 நீதிபதிகள் அடங்கிய அமர்வு 2017 மே 18ம் தேதி மரண தண்டனைக்கு தடை விதித்தது. இரு நாட்டு தரப்பிலும் வழக்கு தொடர்பான தங்களது விரிவான விளக்கங்களை ஏற்கனவே நீதிமன்றத்தின் முன் சமர்பித்துள்ளன.