மும்பை: புல்வாமா தீவிரவாத தாக்குதலை கண்டித்து உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட கூடாது என்ற கோரிக்கை வலுத்துள்ளது. காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் இந்திய வீரர்கள் 41 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த கோர தாக்குதல் இந்தியா மட்டுமின்றி உலகநாடுகளில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பு என்பதால் அந்நாட்டுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன. உலகக்கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணியுடன் எந்த போட்டியிலும் விளையாடக் கூடாது என்ற கோரிக்கை வலுத்துள்ளது.