புதுடெல்லி: பிஎஸ் 4 (பாரத் ஸ்டேஜ்) கார்கள் பழைய கார் சந்தையில் குவிந்து வருகின்றன. இவற்றின் விற்பனையும் அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளை விட இந்திய வாகனங்களின் புகை மாசு அதிக அளவில் உள்ளது. தற்போது பாரத் ஸ்டேஜ் 4 வாகனங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் சர்வதேச தரநிலைக்கு ஏற்ப பாரத் ஸ்டேஜ் 6க்கு மாற வேண்டும் என மத்திய அரசுஅறிவித்தது. இந்த பாரத் ஸ்டேஜ் 6 2020 ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து அமல்படுத்தப்பட இருக்கிறது.எனவே, மாசு கட்டுப்பாட்டு விதிகளின்படி பாரத் ஸ்டேஜ் 4 வாகனங்களை 2020 ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து விற்கக்கூடாது. வாகனங்களில் இருந்து வெளிவரும் கார்பன் உள்ளிட்ட மாசுக்களால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதை கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட தர நடைமுறைதான் பாரத் ஸ்டேஜ் எனப்படுகிறது. பிஎஸ்6க்கு மாற இருப்பதால் இப்போேத சில கார் நிறுவனங்கள் பழைய மாடல்கள் உற்பத்தியை படிப்படியாக நிறுத்த முடிவு செய்துள்ளன. சில மாடல்கள் நிறுத்தப்பட்டதற்கான அறிவிப்புகளும் வெளியாகி விட்டது.
புதிய விதி அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வருவதால், இப்போதே பிஎஸ்4 வாகனங்களை விற்று விட வேண்டும் என வாகன உரிமையாளர்கள் முனைப்பு காட்டுகின்றனர். இப்போதே விற்றால் ஓரளவு நல்ல விலைக்கு விற்கலாம். இல்லாவிட்டால் அடிமட்ட விலைக்குதான் போகும் என்ற கருத்து அவர்களிடையே நிலவுகிறது.இதனால், ஆன்லைன் நிறுவனங்கள் உட்பட, பழைய கார் விற்கும் நிறுவனங்களுக்கு பிஎஸ்4 மாடல் வாகனங்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதை வாங்குவதற்கு மக்களிடையே வரவேற்பு உள்ளது என பழைய கார் விற்பனை செய்பவர்கள் தெரிவிக்கின்றனர். பிஎஸ் 6 தரநிலையிலான வாகனங்கள் விற்பனைக்கு வரும்போது புதிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட விதிமுறைகள் காரணமாக அவற்றின் விலை அதிகமாகவே இருக்கும். இத்துடன் ஒப்பிடும்போது தற்போது பழைய கார் டீலர்களிடம் வரும் பிஎஸ்4 வாகனங்கள் மிக மலிவுதான். எனவே மக்களிடம் இதற்கு வரவேற்பு உள்ளது. குறிப்பாக, முதல் முறை கார் வாங்குபவர்கள் பிஎஸ்4 பழைய மாடல்களை கேட்டுவருகின்றனர் என டீலர்கள் தெரிவிக்கின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி