திருவொற்றியூர்: மாதவரம் திரு.வி.க. தெரு 1 முதல் 5 வது வரை சுமார் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்கு வசிக்கும் மக்களுக்கு தெரு குழாய்கள் மூலம் மாதவரம் மண்டல குடிநீர் வழங்கல் வாரியம் சார்பில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இங்கு உள்ள பல குடிநீர் குழாய்களில், திருகு இல்லாமல் திறந்து கிடப்பதால் குடிநீர் வீணாகிறது. அப்படி வீணாகும் குடிநீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புலம்புகின்றனர். இதனால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வீணாகாமல் இருக்க, துணி மற்றும் பிளாஸ்டிக்கை கொண்டு குழாய்களில் அடைத்து வைத்துள்ளனர். மேலும் குழாயின் அருகே வீணாகும் குடிநீர் தேங்கி நிற்பதால், அங்கு கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.