கருங்கல்: கருங்கல் காவல் நிலையத்தின் எதிர்புறம் நேற்று பகல் வேளையில் கேரள பதிவெண் கொண்ட சொகுசு கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. சிறிது நேரத்தில் காரில் இருந்த கும்பல், மது பாட்டில்களை திறந்து மது அருந்த ஆரம்பித்தனர். இதை கண்ட பொதுமக்கள் பட்டப்பகலில் நடுரோட்டில் காரை நிறுத்தி மதுஅருந்துகிறார்களே என்று முகம் சுளித்தனர். இதையடுத்து அவர்கள் கருங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து காரையும், அதிலிருந்த 10 பேரையும் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
விசாரணையின் போது காரில் இருந்தவர்கள் கூறுகையில்: நாங்கள் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்கள். கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தோம். கார் நிறுத்திய இடத்தின் எதிரே காவல் நிலையம் இருந்தது எங்களுக்கு தெரியாது என்று தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தல், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியது உள்பட சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவத்தால் கருங்கலில் பரபரப்பு ஏற்பட்டது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி