×

அரூர் அருகே நள்ளிரவில் பயங்கரம்: டாஸ்மாக் சேல்ஸ்மேனை துப்பாக்கியால் சுட்டு 1.50 லட்சம் துணிகர கொள்ளை: 3 பேர் கும்பல் அட்டூழியம்; வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களா?

அரூர்: அரூர் அருகே டாஸ்மாக் விற்பனையாளரை நள்ளிரவில் துப்பாக்கியால் சுட்டு 1.50 லட்சத்தை 3 பேர் கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த நரிப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் மகரஜோதி(44). இவர் அதே பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். நேற்றிரவு வழக்கம் போல, கடையில் விற்பனை முடிந்து மதுவிற்பனை செய்த பணம் 1.50 லட்சத்தை எடுத்துக் கொண்டு தனது டூவீலரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 3 பேர், திடீரென அவரது டூவீலரை வழிமறித்தனர்.

அப்போது, அவர்களில் ஒருவர் கையில் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் மகரஜோதியை நோக்கி சுட்டான். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் தனது கைகளால் முகத்தை மறைக்க முயன்ற போது, 2 கைகளிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதனால் அலறித்துடித்த அவர், ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்தார். அந்த நேரத்தில் மற்ற இருவரும் அவர் வைத்திருந்த பணப்பையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
இதுகுறித்த தகவலறிந்த கோட்டப்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயத்துடன் கிடந்த மகரஜோதியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், மேல்சிகிச்சைக்காக அவர் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். துப்பாக்கியால் சுட்டு பணத்தை கொள்ளையடித்த நபர்கள், வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் போல இருப்பதாக மகரஜோதி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Arur ,Tasmaq Selsman ,gang rape ,North , Aroor, Tasmaq Chelman, robbery
× RELATED டூவீலர்கள் மோதி தொழிலாளி பலி