சென்னை: சென்னை மாவட்ட வருவாய் துறையில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசு 2003ம் ஆண்டு இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் முன்னேற்ற சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து சென்னையில் நேற்று சங்கத்தின் தலைவர் பார்த்தசாரதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதில் வருவாய்த்துறை முக்கிய பங்காற்றி வருகிறது. ஆனால், சென்னை மாவட்ட வருவாய் அலகில் அதிகாரிகள் எப்படிப்பட்ட தவறு செய்தாலும் அவர்களுக்கு பதவி உயர்வு அளித்து வருகின்றனர். குறிப்பாக சென்னை மாவட்டத்தில் 5 வட்டங்களில் பணியாற்றிய வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது அரசு நிலத்தை தனியாருக்கு விற்பனை செய்தது.
பட்டாக்களை பெயர் மாற்றம் செய்வதில் லஞ்சம் பெறுவது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் உள்ளன. சில அதிகாரிகள் மீது உயர் அதிகாரிகள் வரை புகார் சென்றும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து கடந்த ஓராண்டாக எங்கள் சங்கத்தின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை செயலாளர், வருவாய்த்துறை அமைச்சர் ஆகியோரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வருவாய்த்துறையில் இதுபோன்று அதிகாரிகள் செய்யும் ஊழல்களால் சம்பந்தப்பட்ட துறைக்கு கெட்ட பெயர் உருவாகிறது. ஊழல் அதிகாரிகளை சுட்டிக்காட்டிய எங்களுக்கு வரவேண்டிய அனைத்து அரசு சலுகைகளையும் நிறுத்தி வைத்துள்ளார்கள். எனவே, குறிப்பிட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி