×

அனைத்து ரேஷன் கடைகளிலும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

சென்னை: அனைத்து ரேஷன் கடைகளிலும் கைரேகை பதிவு (பயோமெட்ரிக் சிஸ்டம்) முறை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.  சென்னை அபிராமபுரத்தில் இயங்கி வரும் நியாய விலைக்கடையில் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் தலைமையில் கடந்த 2010ல் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, ரேஷன் பொருட்கள் கள்ளத்தனமாக விற்கப்படுவதை கண்டுபிடித்த அதிகாரிகள், அங்கு பணியாற்றிய கீதா என்ற ஊழியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.   இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கீதா தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நியாய விலைக் கடைகளில்  கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.  வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,  கூட்டுறவு சங்கங்களின்  கூடுதல் பதிவாளர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  அதில், தமிழகம் முழுவதும் உள்ள 32 ஆயிரத்து 909 நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகின்றன.  

அனைத்து கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துவது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரிடம் ஆலோசனை நடத்திய பின்னர் அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.  வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநர் எம்.சுதாதேவி ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், தமிழகத்தில் சிவில் சப்ளை கார்ப்பரேஷன் சார்பில் நடத்தப்படும் 1455 கடைகளில் 20 கோடியே 79 லட்சத்து 92,250 செலவில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும். மேலும், தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் நியாயவிலை கடைகளுக்கு சிசிடிவி கேமராக்களை பொருத்த 97 கோடி செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது.

 இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு:   கடந்த ஜனவரி 8ம் தேதி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் அரசுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.  அதில், தமிழகம் முழுவதும் உள்ள 34,880 நியாயவிலைக் கடைகளில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க அனைத்து பயனாளிகளுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது.   1500 குடும்ப அட்டைகள் உள்ள கடைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை 2019-20, 2020-2021 என இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும். இதன் மூலம் 1500 குடும்ப அட்டைகள் உள்ள 416 கடைகளில் 5 கோடியே 94 லட்சம் செலவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

அதுமட்டுமல்லாமல், எல்லா குடோன்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.   நியாயவிலை கடைகளில் முறைகேடுகளை முற்றிலும் தடுப்பதற்காக குடும்ப அட்டைதாரர்களின் கைரேகை பதிவான பயோமெட்ரிக் முறை கொண்டு வருவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டையில் உள்ள ஏதாவது ஒரு நபர் கைரேகையைப் பதிவு செய்தால் போதுமானது. இதன் மூலம் முறைகேடுகள் முற்றிலும் களையப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பான அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசு சிறப்பு பிளீடர் எல்.பி.சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். சிவில் சப்ளை ஆணையரின் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. இந்த அறிக்கை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வரும் மார்ச் 11ம் தேதி கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ration shops ,Supreme Court ,Tamil Nadu Government , All Ration Shop, Biometric, High Court, Tamilnadu Government
× RELATED ஜாபர்சேட் மனைவி மீதான குற்றப்பத்திரிகை ரத்து: உச்சநீதிமன்றம் உத்தரவு