சிகாகோ: அமெரிக்காவில் தொழிற்சாலை வளாகத்தில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர். போலீஸ் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். அமெரிக்கா நாட்டின் இல்லினாய் மாகாணத்தில் உள்ளது அரோரா. தொழிற்சாலை நிறைந்த பகுதியான இங்கு நேற்று முன்தினம் பிற்பகல் 1.28 மணியளவில் துப்பாக்கியுடன் வந்த மர்மநபர் திடீரென அங்கிருந்த தொழிலாளர்களை சரமாரியாக சுட்டார். இதில் தொழிலாளர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாக்குதல் பற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் மர்மநபரை பிடிக்க முயன்றனர். அப்போது அந்த நபர் போலீசார் மீதும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதையடுத்து, போலீசார் நடத்திய பதிலடியில் அந்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் 5 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.