வேலூர் : தமிழகம் முழுவதும் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக தாலுகா வாரியாக 108 ஆம்புலன்ஸ்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் விபத்து காலங்களில் முதலுதவி சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் விபத்தில் சிக்கி இறப்பவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதில் பெரும்பாலான உயிர் இழப்புகள் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்காததால் ஏற்பட்டது என மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டது. இதனை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் கடந்த 2005ம் ஆண்டு 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 859 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் 1500 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் 1500 மருத்துவ உதவியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் முதல் அரக்கோணம் வரை 54 ஆம்புலன்ஸ்கள் இயங்குகின்றன. இதில் 250 பேர் வேலை செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கடந்த 2015ம் ஆண்டு 108 பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. விபத்து நடந்த இடத்திற்கு செல்லும் 108 பைக் ஆம்புலன்ஸ் ஊழியர் படுகாயமடைந்தவருக்கு தேவையான முதலுதவி சிகிச்சைகள் அளித்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க உதவி செய்வார். முதற்கட்டமாக சென்னையில் 23 பைக் ஆம்புலன்ஸ்கள் என மொத்தம் 64 ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. படிப்படியாக தாலுகா வாரியாக 108 பைக் ஆம்புலன்ஸ் சேவை விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.