தாமரை கட்சியின் தேசிய செயலாளர் சமீபத்தில் கடலூர் மத்திய சிறைக்கு வந்து, பாஜகவை சேர்ந்த கல்யாணமான பெயரைக்கொண்ட சிறைவாசியை சந்தித்து விட்டுப்போயிருக்கிறார். அதன்பிறகு பாஜக சிறைவாசிக்கு ஏகப்பட்ட சலுகையாம். பொது கைதி அறையில் இருந்து மாற்றி, சிறையின் உள்ளே இருக்கும் மருத்துவமனையில் அவர் சொகுசாக தங்க வைக்கப்பட்டிருக்கிறார். உடல் ரீதியாக பாதிப்பில்லாத அவரை ஏன், மருத்துவமனையில் வைத்திருக்கிறீர்கள் என சிறையின் மருத்துவர் கொக்கி போட்டிருக்கிறார். இதனால் கடுப்பாகிப்போன உயர் அதிகாரி, உடனே ஸ்ேடார் ரூமில் ஆய்வு நடத்தி சிறைவாசிகளுக்கான உணவு, காய்கறி உள்ளிட்ட பொருட்கள் இருப்பு பற்றாக்குறை என நோட் எழுதி எல்லோரையும் அலற வைத்திருக்கிறாராம். இந்த விஷயம் வெளியே போகச்கூடாது என எல்லோருக்கும் மறைமுக உத்தரவாம். இதனால் மற்ற சிறைத்துறை வார்டன்களும், கண்காணிப்பாளருக்கு எதிராக வாய்திறப்பதில்லையாம். கடலூர் சிறையின் உயர் அதிகாரி கண் அசைவில்தான் எல்லாமும் நடக்கிறது.
முறுக்கிய ‘ஏசியின்’ மீசை வழக்கு பயத்தால் பணிந்தது
நெல்லையில் உதவி கமிஷனராக பணியாற்றிய முறுக்கு மீசை ஏசி கஞ்சா வியாபாரிகளிடம் பெரும் தொகை பெற்றது, கடத்தல் தங்கத்தை கபளீகரம் செய்தது, பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைத்த மருத்துவர்களை காப்பாற்ற கரன்சி என ஒரு மாதத்தில் அடுத்தடுத்து பண மழையில் நனைந்ததாக சக காக்கிகள் காதில் புகை வந்தது. புகார்கள் குவிய அதிரடியாக சென்னைக்கு மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். ஆனால் முறுக்கு மீசைக்காரர், டிரான்ஸ்பர் உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்ய நீதிமன்றம் அவரது டிரான்ஸ்பர் உத்தரவை இடைக்காலமாக ரத்து செய்தது. நெல்லை ருசியை மறக்காத அவர் இங்கு வந்து மீசையை முறுக்கினார். ஆனால் அவருக்கு போஸ்டிங் எதுவும் வழங்காத நிலையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்தார். இதற்கிடையில் அவர் மீதான ஆதாரங்களை சேகரித்து லஞ்சம் கொடுத்தவர்களிடம் புகார் பெற்று ஏசி மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கையை சிட்டி உயரதிகாரி துவங்கினார். இந்நிலையில் ஐகோர்ட்டில் ஏற்கனவே அவர் தாக்கல் செய்த மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டதால் மீண்டும் சென்னைக்கே பறந்து விட்டார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி