சுத்தம்... சுகாதாரம்... இயற்கை உணவு... அம்மன்புரத்தில் விருதுகளை அள்ளி குவிக்கும் அரசு பள்ளி: அம்மன்புரத்தில் விருதுகளை அள்ளி குவிக்கும் அரசு பள்ளி

ஆறுமுகநேரி: திருச்செந்தூர் அருகே தனியார் பள்ளிகளை பின்னுக்குத்தள்ளி விருதுகளை அள்ளி குவித்து வருகிறது அரசு பள்ளி. இந்த பள்ளியில் சுத்தம், சுகாதாரம், இயற்கை உணவே இவர்களது தாரக மந்திரம். நாற்பது ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் அரசு பள்ளிகள் கொடிகட்டி பறந்தன. ஆசிரியர்கள் சொந்த பிள்ளைகள் போல் மாணவர்கள் நலனில் அக்கறை செலுத்தி படிப்பு சொல்லி கொடுப்பதில் சாதனை படைத்தார்கள். அன்றைய கால அரசு பள்ளிகளில் படித்தவர்கள் மேதைகளாகவும், விஞ்ஞானிகளாகவும், உயர் பதவிகளிலும் கோலோச்சினர். அதன்பிறகு அரசு தாராளம் காட்டியதால் இன்று திரும்பும் இடமெல்லாம் தனியார் பள்ளிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்த்தால் படிப்பு ஏறாது என்ற தவறான கருத்தால் சாமானிய மக்கள்கூட தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து வருகிறார்கள். ஆனால் அதையும் மீறி பல இடங்களில் அரசு பள்ளிகள் சாதனை படைத்து வருவதையும் நாம் பார்க்கிறோம். திருச்செந்தூர் தாலுகாவிலும் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று ஓசைப்படாமல், தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

திருச்செந்தூர் அருகே அம்மன்புரத்தில் உள்ள அந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு சென்றோம்.

அப்போது மதிய உணவு சாப்பிட்டுவிட்டு குழந்தைகள் மரத்தடியில் பாய் விரித்து அதிலிருந்து படித்துக்கொண்டிருந்தனர். அவர்களை வழி நடத்திக்கொண்டிருந்த பள்ளியின் தலைமை ஆசிரியை ஞானஅருணா ஜெபசோபனா என்பவரிடம் பேச்சுக் கொடுத்தோம். அவரும் வந்திருப்பது பத்திரிகையாளர் என்று தெரிந்ததும், தங்கள் பள்ளியை பற்றிய கதையை கூற ஆரம்பித்தார். இந்த பள்ளி ஆங்கிலேயர் காலத்தில் 1907ம் ஆண்டு தாலுகா போர்டால் துவங்கப்பட்டது. ஆரம்பத்தில் மாணவர்கள் மட்டும் படித்து வந்துள்ளனர். 1933ம் ஆண்டு மாணவிகளும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். 1935ம் ஆண்டு அந்த பள்ளி ஜில்லா போர்டுக்கு மாற்றப்பட்டு நிரந்தர அங்கீகாரம் கிடைத்தது. அப்போது ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியர்கள் என 3 பேர் பணியாற்றினர். இப்போது தலைமை ஆசிரியரும், ஒரு ஆசிரியர் மட்டும்தான் உள்ளனர். அந்த காலத்தில் ஓட்டு கட்டிடத்தில் இயங்கி வந்த இந்த பள்ளி தற்போது மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இரு பகுதியாக கட்டிடம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது என்றார்.

தொடர்ந்து நோட்டமிட்டபோது வகுப்பறையில் கல்வி சம்பந்தமான ஓவியங்கள் வரையப்பட்டிருந்தது.  அரசு பள்ளிதானே அப்படி என்ன பெரியதாக இருக்கப்போகிறது என நினைத்ததற்கு நேர் மாறாக வகுப்பறைகளும், கழிப்பறைகளும் சுத்தம், சுாதாராம் நிறைந்து காணப்பட்டது. துவக்கப்பள்ளி என்றபோதிலும் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனி கழிப்பறைகள் உள்ளன. இது தவிர மாற்று திறனாளிகளுக்கும் ஒரு கழிப்பறை உள்ளது. இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்கென்றே தனியாக ஒரு ஆளை நியமித்து உள்ளனர். இவர் தினமும் காலை, மாலை என இருவேளை பினாயில் போட்டு சுத்தம் செய்து விடுகிறார். இது தவிர கழிப்பறைக்குள் தண்ணீர் வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அம்மன்புரம் மெயின் ரோட்டில் உள்ள இந்த பள்ளியை சுற்றி  நாவல்மரம், தென்னை, மா, பேரிச்சை, வேம்பு, அத்தி, ஆலமரம், பாக்கு, முருங்கை, நார்த்தை, வாழை, புங்கை, மாதுளை, நெல்லி உள்ளிட்ட பல்வேறு மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இது தவிர மூலிகை செடிகளான துளசி, ஆடாதோடா, தூதுவளை, காற்பூரவல்லி போன்ற செடிகளையும் வளர்த்து வருகிறார்கள். இது மட்டுமின்றி கிச்சன் கார்டன் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு வகை கீரைகள், கத்திரி, தக்காளி, மிளகாய்,  புடலை, பீர்க்கங்காய், அவரை, பூசணி என காய்களி வகைகளும் ஏராளமாக உள்ளன. மதியம் பள்ளியில் வழங்கப்படும் சத்துணவோடு தினமும் ஏதாவது ஒரு கீரை சேர்த்து வழங்கப்படுகிறது. சத்துணவும் அத்தனை தரமாக தயாரித்து பிள்ளைகளுக்கு கொடுப்பதால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவதை பார்க்க முடிந்தது. சமையல் எப்படி உள்ளது என தலைமை ஆசிரியை அதை ருசித்து பார்த்த பின்னரே அவற்றை பிள்ளைகளுக்கு வழங்குகிறார்கள். அவர்களுக்கு சில்வர் தட்டு, டம்ளர் வழங்கப்பட்டுள்ளது. சாப்பிடும் முன் அனைவரையும் சோப்பால் கைகழுவ வைக்கிறார்கள். இதுபோல் விளையாடியபின் கண்டிப்பாக கை, கால்களை சுத்தமாக கழுவவேண்டும். பிள்ளைகள் விளையாடுவதற்காக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மதியம் சாப்பிட்டபின் பிள்ளைகள் அனைவரும் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில் அமர வைக்கப்படுகிறார்கள். அவர்கள் விருப்பத்திற்கேற்ப நூலகத்தில் இருக்கும் புத்தகங்களை கொடுத்து படிக்க சொல்கிறார்கள்.

தனியார் பள்ளி மாணவர்கள் போல், யூனிபார்ம், டை, சூ சாக்ஸ், ஐடி கார்டு இவர்களுக்கும் உண்டு. பள்ளி தோட்டத்தில் விளையும் பழங்கள் மாணவர்களுக்கே தரப்படுகிறது. பள்ளியைச் சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டு இருப்பதால் வெளி நபர்கள் யாரும் உள்ளே நுழைந்து விட முடியாது. அதற்காக இரு இடங்களில் இரும்பு கேட் அமைத்துள்ளனர். இப்படி பல்வேறு வசதிகள் செய்து கொடுத்துள்ளனர். மாணவர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு பள்ளி செயல்பாடுகள் உள்ளதால், 2007-2008ம் ஆண்டு சிறந்த பள்ளிக்கான விருதும், அனைவருக்கும் கல்வி திட்ட பணியில் சிறந்த ஆசிரியருக்கான விருது 2008ல் கிடைத்துள்ளது. இதுபோல் 2013-14ம் ஆண்டு மீண்டும் மாவட்ட அளவில் சிறந்த விருதும், 2017-18ம் ஆண்டு மாவட்டத்தில் தூய்மை பள்ளி என தேர்ந்தெடுக்கப்பட்டு கலெக்டர் சந்தீப் நந்தூரி விருது வழங்கியிருக்கிறார். சமீபத்தில் திருச்செந்தூர் சிட்டி அரிமா சங்கம் சார்பில் மாவட்டத்தில் சிறந்த ஆசிரியருக்கான விருதை தலைமை ஆசிரியை ஞான அருணா ஜெப சோபனாவுக்கு கொடுத்துள்ளனர். இதுதவிர ஏராளமான விருதுகள் இந்த பள்ளி பெற்றிருக்கிறது. தற்போது  பள்ளியில் தலைமை ஆசிரியை தவிர அமுதா உன்ற உதவி ஆசிரியையும் உள்ளார். இவர்கள் இருவரின் கடின உழைப்பே பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளது என்றால் மிகையாகாது.

பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்கள்

அம்மன்புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளில் படித்த மாணவர்களில் சிலர் போலீஸ் அதிகாரியாகவும், கல்லூரி பேராசிரியர்களாகவும், அரசு செவிலியர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் தங்கள் பள்ளிக்கு பெருமை சேர்க்கும் விதமாக அவ்வப்போது இங்கு வந்து ஆசிரியர்களை பார்த்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

கடலை, எள்ளுமிட்டாய்...

குடியரசு தினம், மற்றும் சுதந்திர தினத்தன்று பள்ளிகளில் கொடி ஏற்றி குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுப்பது வழக்கம். அதுதான் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பள்ளியில் வித்தியாசமாக இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று மிட்டாய்க்கு பதில் கடலை மிட்டாய் மற்றும் எள்ளு மிட்டாய் வழங்கினர். அதில் சத்து இருப்பதால் இதை வழங்கியதாக தலைமை ஆசிரியை தெரிவித்தார். இப்படி எல்லா விதத்திலும் மாணவர்கள் நலனில் அக்கறை காட்டி பள்ளிக்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறது இந்த பள்ளி.

ஆங்கில பயிற்சிக்கு தனி ஆசிரியை!

இந்த பள்ளியில் 1 முதல் 3 வரை ஆங்கில வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளதால், பிள்ளைகள் ஆங்கிலத்தை எளிதில் புரிந்து கொண்டு, பயன்பெறவேண்டும் என்ற நோக்கத்தில் தனியாக ஒரு ஆசிரியையை நியமித்து இருக்கிறார்கள். அவர் தினமும் வந்து பாடம் நடத்தி செல்கிறார். இதுபோல் தனியாக யோகா வகுப்பும் நடத்தப்படுகிறது. விளையாட்டில் ஆர்வம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பிள்ளைகளுக்கு பல்வேறு விளையாட்டுகளும் சொல்லி கொடுக்கப்படுகிறது. இதுபோல் கம்ப்யூட்டர், லேப்-டாப் வசதியும் உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: