வேளச்சேரி: மேடவாக்கம் குப்பை கிடங்குக்கு சமூக விரோதிகள், அடிக்கடி தீ வைப்பது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு, நிரந்தர தீர்வு கிடைக்குமா என வாகன ஓட்டிகள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். மேடவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 40க்கும் மேற்பட்ட நகர்களும், 200க்கும் மேற்பட்ட தெருக்களும் உள்ளன. இங்கு ஒரு நாளைக்கு 10 டன் குப்பை சேகரமாகின்றன. அவை, வேளச்சேரி பிரதான சாலையை ஒட்டியுள்ள மேடவாக்கம் கல்லுக்குட்டை பகுதியில் உள்ள குப்பை கிடங்கில், பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் குப்பை கிடங்கை சுற்றிலும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் பெருகிவிட்டன. இதையடுத்து, அங்கு குப்பை கொட்டுவதால் குப்பை துர்நாற்றம் வீசுவதோடு சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு சுற்றுவட்டார பகுதி மக்கள் மற்றும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கண் எரிச்சல், சுவாசப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.எனவே, குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும் என தொடர்ந்து இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மாவட்ட நிர்வாகத்திற்கு இந்த பிரச்னை கொண்டு செல்லப்பட்டும், குப்பை கிடங்கை மாற்ற இதுவரை நடவடிக்கை இல்லை.